ஒரு படைப்பாளியின் கதைப் பெண்டிருக்காக கலங்கிய அரங்கம்

காலத்தில் கரைந்து போகாமல் காலமாகி நிற்கிற ஒருவரை நினைவுகூரும் கூடுகைகளில் அவர் சந்தித்த சோதனைகளையும், வென்று காட்டிய சாதனைகளையும் பகிர்ந்திடும்போது பேசுகிறவர்களும் கேட்கிறவர்களும் உணர்ச்சிவசப்படுவது புதிதல்ல. ஒரு படைப்பாளியை நினைவுகூர்வதற்கான அந்தக் கூடுகையிலும் உரையாளர்கள், அவையினர் இரு தரப்பினரும் நெகிழ்ந்தார்கள். அவருடைய வாழ்க்கைத் தடங்களால் அப்படி உணர்ச்சிமயமாகவில்லை, மாறாக, அவருடைய எழுத்தாக்கங்களைச் சொன்னபோது, கதை மாந்தர்களை எடுத்துக்காட்டியபோது அரங்கத்தினரும், தாங்கள் சந்தித்த மனிதர்கள் பற்றிய நினைவுகள் கிளர்தப்பட்டவர்களாக ஆழ்ந்த உணர்வில் மூழ்கி எழுந்தார்கள். எழுத்தாளரும், மக்களுக்கான பல்வேறு போராட்டங்களில் முன்னணியில் நின்றவருமான பா.செயப்பிரகாசம் நினைவு கருத்தரங்கில் இந்த மாறுபட்ட அனுபவம் வாய்த்தது. சமூகப் போராளி எளியோரின் வழக்குரைஞர் பி.வி.பக்தவச்சலம் அறக்கட்டளை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு இணைந்து அந்தக் கருத்தரங்கத்தை சனிக்கிழமையன்று (2025 மார்ச் 15), சென்னையின் ‘இக்சா’ வளாகச் சிறு கூடத்தில் நடத்தின, பா.செ‘யின் படைப்புலகம்...